புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்து கூட்டுக் கூட்டத்தில் கடந்த 31ம் தேதி உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, தேர்வு முறைகேடுகள் குறித்த இளைஞர்களின் கவலைகளை அரசு அறிந்திருப்பதாகவும், இந்த முறைகேடுகளை கடுமையாக கையாள புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அதன்படி, பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின்படி அரசு போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும். குறிப்பாக இந்த மசோதா முறைகேடு கும்பல்கள், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை விதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சட்டத்தின் இலக்காக மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.