தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி பேசியதாவது: பாஜ அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்து போனார்கள். பின்னர் நிர்பந்தத்தினால் ஒன்றிய அரசு அதனை திரும்ப பெற்றது. அவைகள் விவசாயிகளை பாதுகாக்க அல்ல. முதலாளிகளை பாதுகாக்க. மோடி பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 108 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் கிடைத்த பணம் ஏழரை லட்சம் கோடி ரூபாய். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்த ஒரே இயக்கம் திமுக. இந்த முறை ஒன்றியத்தில் இருந்து பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.