அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் இயங்கி வருகிறது. இங்கு, 21 கடற்படை வீரர்களுக்கு தரை மற்றும் வான்வெளிகளில் கடுமையான பல்வேறு பயிற்சிகளும், ஹெலிகாப்டர் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் கடந்த 21 வார காலம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், 100வது ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா கலந்து கொண்டு, வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பினை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய வீரர் நிகிலுக்கு கேரளா கவர்னர் சுழற் கோப்பையை வழங்கி கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா பேசுகையில், ‘நாட்டிற்காக சேவை செய்ய கடற்படையில் சேர்ந்துள்ள வீரர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது கண்ணும் கருத்துடனும், விழிப்புடனும், தியாக மனப்பான்மையோடும் பணியாற்ற வேண்டும்’ என்றார்.