தஞ்சாவூர்: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. அவர்கள் அங்குள்ள பெரியார் சிலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஊதியத்தை வழங்காமல் நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஊதியம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து முழுக்கமிட்டபடி பேரணியாக சென்று ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஊதியத்தை வழங்க அவர்கள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நுழைவாயில் முன்பு இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு முன்பு ஊதியத்தை வழங்கவில்லை என்றால் பண்டிகை நாளை கருப்பு நாளாக அனுசரிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். பழனியில் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், 100 நாள் வேலையை 200 நாளாக நீட்டிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிகளையும் அவர்கள் முன்வைத்தனர்.