கோவை, ஆக.27: பொள்ளாச்சியில் உள்ள சரணாலயம் குழும தொண்டு நிறுவனங்களின் சார்பில் வறுமை நிலையில் கைவிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை தங்க வைக்கும் நோக்கத்துடன் ‘சரணாலயம் – பிரியம்’ துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, கலெக்டர் கிராந்திக்குமார் பாடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆதரவற்ற ஏழை, எளிய முதியவர்கள் 100 நபர்கள் தங்கும் அளவில் ‘சரணாலயம் – பிரியம்’ கட்டமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முறையாக பதிவு செய்தால் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெற்று தரவும் அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகமும், அரசும் செய்யும்’’ என தெரிவித்தார்.
இதில், பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன், சராணாலய குடும்ப நிறுவனத் தலைவர் வனிதா ரெங்கராஜ், அறங்காவலர்கள் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், குருநாதன், தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் பிரியங்கா மற்றும் தொண்டு நிறுவன அமைப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.