Sunday, June 16, 2024
Home » 10 வருடங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நீக்குவோம் ஆசிரியர், அரசு ஊழியர் நம்பிக்கை வீண் போகாது: ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

10 வருடங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நீக்குவோம் ஆசிரியர், அரசு ஊழியர் நம்பிக்கை வீண் போகாது: ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by kannappan

சென்னை:  ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆசிரியர், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று மாலை சென்னை தீவுத் திடலில் நேற்று நடந்தது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். கடந்த 1988ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்பது இதுவே முதன்முறை. மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், ஆறுமுகம், மாயவன், குமார், முத்துசாமி, மயில், தாஸ், வின்சென்ட் பால்ராஜ், பெருமாள்சாமி, காந்திராஜ், தியாகராஜன், சேகர், சங்கரப் பெருமாள், மகேந்திரன், செல்வராஜ், வெங்கடேசன், அன்பரசு, தியோடர் ராபின்சன், சண்முகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக, மகத்தான வெற்றியைப் பெற்று ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்படி ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நீங்கள்தான் காரணம். நீங்கள் அதிகமான எதிர்பார்ப்போடு வந்திருப்பீர்கள். நானும், உங்களது எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், உங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று தேர்தல் நேரத்தில் நான் வாக்குறுதி தந்தது உண்மைதான். நான் அதை மறுக்கவில்லை,  மறைக்கவில்லை மறக்கவும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசு, உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று இப்போதும் நான் உறுதி அளிக்கிறேன். இந்த மாநாட்டுக்கு வரும்போதே, உங்களது கோரிக்கையை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் மேடைக்கு வந்திருக்கிறேன். ‘‘நன்றாக கவனிக்க வேண்டும்’’, உங்களது கோரிக்கைகளை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். 15 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. 10 வருடங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவோம், அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். முதலாவதாக, அனைத்து வகையான, தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும், 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. அடுத்ததாக, பல்லாண்டுகளாக பணிமாறுதலின்றி இருக்கக்கூடிய இப்பணியாளர்களுக்கு அவர்தம் விருப்பத்திற்கேற்ப, இணைய வழியில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15 முதல் நடத்தப்படும். தமிழகத்தில் பல்லாண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகக் கட்டமைப்பு, மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாணை எண். 101 வாயிலாக 18-5-2018 அன்று மாற்றியமைக்கப்பட்டது. ஆசிரியர்கள், சங்கங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த நிர்வாக முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மறு சீரமைப்பில் இருந்த பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி, இதனை களைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அரசாணை எண்.151 வாயிலாக உரிய உத்தரவுகள், 9-9-2022 அன்று நான் பிறப்பித்திருக்கிறேன். இதன் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொடக்கக் கல்விக்கென மாவட்ட அளவிலான அலுவலர் பணியிடம் புதிதாகக் கிடைக்கப் பெறுவதுடன், தனியார் பள்ளிகளை நிருவகிக்க தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளின் நீண்டநாள் கோரிக்கையான, ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசின் நிதிநிலை சீராகச் சீராக மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து என்பது மிகப்பெரிய நலத்திட்டம். கோடிக்கணக்கான மகளிர் இதன் மூலம் பயனடைகிறார்கள். இருந்தாலும் இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1520 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பள்ளிப் பிள்ளைகளுக்கான சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1949 கோடி ஆண்டுக்கு செலவாகிறது. இந்த நிலையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், அண்ணா பிறந்த நாளான 15ம் தேதியில் இருந்து நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பவுனுக்கு குறைவான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக பல லட்சம் மக்கள் பயனடைகிறார்கள் என்று இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அரசின் வருவாய் சுருங்கிவிடவும் செய்கிறது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயில் 52.3 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முதல் காலாண்டில் (ஏப்ரல்  ஜூன்) வளர்ச்சியை அடைந்துள்ளோம். ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் முன் வருகிறார்கள். இதன் மூலமாக தமிழகத்தில் முதலீடுகள் பெருகி, வளர்ச்சியும் பெருகி வருகிறது. இவை முழுமையான வளர்ச்சியாக மாறும்போது, அனைவரது ஆசையும் நிறைவேறும். அனைவரது கனவும் நிறைவேற்றப்படும்.இந்த மாநாட்டிற்காக நாளேடுகளில், நீங்கள் அளித்திருக்கக்கூடிய விளம்பரத்தில் எங்கள் ஒற்றை நம்பிக்கையே என்று பாசத்தோடு குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உங்களுடைய நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. தலைவர் கலைஞர், உங்களுக்காக, பல திட்டங்களைத் தீட்டி, உங்கள் வாழ்விலே வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்களோ, அதை நானும் ஏற்றுக்கொண்டு அதனை எந்நாளும் காப்பாற்றுவேன்.இதனை ஏதோ ஒரு முதலமைச்சராக இருந்து சொல்கிறேன் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. உங்களில் நானும் ஒருவன்.கடந்த பத்தாண்டுகளாக இந்த நாட்டிலே சீரழிந்து போயிருக்கிறது நிதிநிலைமை. இருந்தாலும், நாம் ஆட்சிக்கு வந்தபிறகு சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆகவே நீங்கள் சொன்னதை நிச்சயமாக, உறுதியாக, நான் தொடக்கத்திலே சொன்னேன். இந்த வெற்றி உங்களால் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சியை உருவாக்கியிருக்கக்கூடிய உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் பக்கபலமாக இருப்போம். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு என்றைக்கும் துணை நிற்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்….

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi