Tuesday, May 28, 2024
Home » 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 102 மையங்களில் 22,338 மாணவர்கள் எழுதுகின்றனர்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 102 மையங்களில் 22,338 மாணவர்கள் எழுதுகின்றனர்

by Neethimaan

தர்மபுரி, ஏப்.4: தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில், நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதனை 22,338 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதுதொடர்பாக துணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நடைபெற்று வந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. 11ம் வகுப்பு பொது தேர்வு நாளையுடன்(5ம்தேதி) முடிகிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை மறுநாள்(6ம் தேதி) துவங்குகிறது. 20ம் தேதியுடன் தேர்வு முடிகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும், மொத்தம் 102 மையங்களில் தேர்வு நடக்கிறது.

மாணவர்கள் 11 ஆயிரத்து 653 பேர், மாணவிகள் 11 ஆயிரத்து 685 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 338 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். நடப்பாண்டு தர்மபுரி மாவட்டத்தில் 118 அரசு உயர்நிலைப்பள்ளி, 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 96 மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 321 பள்ளிகளைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், 9 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அரசு தேர்வுத் துறை இயக்ககம் துணை இயக்குனர் சுரேஷ்பாபு தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்வு எழுத வரும் மாணவர்களை, பதற்றம் அடைய செய்யாமல், அவர்களை பரிசோதித்து மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் புகாருக்கு இடமின்றி பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 98 அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்கள் எழுதும் 4 தேர்வு மையங்களும் என மொத்தம் 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22 ஆயிரத்து 338 பேர் தேர்வு எழுதுகின்றனர். அரசு பொதுத்தேர்வுகளுக்காக வினாத்தாள் காப்பாளர்கள், கட்டு காப்பாளர்கள், முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரூரில் நடந்த தேர்வில், 520 அறை கண்காணிப்பார்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் தர்மபுரி, பாலக்கோடு கல்வி மாவட்டத்திலும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 1400 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணிவரை நடக்கிறது. 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது சிலர் வரவில்லை. அவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க, தர்மபுரி மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போதும், தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளின் விவரங்களை, முன்னதாகவே தெரிந்து கொண்டு தெரிவிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்கள் அனைவரும், மதியம் 1.15 மணிக்குள் தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளின் விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

16 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi