பெரணமல்லூர், மார்ச் 1: பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பக்தர்கள் சுவாமிக்கு சுமார் ₹14.57 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாரம்தோறும் சனிவார வழிபாடும், சித்திரை, புரட்டாசி மாதங்களில் பிரமோற்சவ விழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறையினர் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்குமேல் இந்து சமய அறநிலைய துறை உதவிஆணையர் சிவலிங்கம், செயல்அலுவலர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு மாலை 3 மணிவரை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் சுவாமிக்கு காணிக்கையாக ₹14 லட்சத்து 57ஆயிரத்து 159 செலுத்தியிருந்தனர். மேலும் 101 கிராம் தங்கமும், 79 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காணிக்கை பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.