Wednesday, May 15, 2024
Home » ₹1 லட்சத்துக்கு விற்பனையான ஆடுகள் கே.வி.குப்பத்தில் களைகட்டிய வாரச்சந்தை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ₹4 கோடிக்கு வர்த்தகம்

₹1 லட்சத்துக்கு விற்பனையான ஆடுகள் கே.வி.குப்பத்தில் களைகட்டிய வாரச்சந்தை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ₹4 கோடிக்கு வர்த்தகம்

by Karthik Yash

கே.வி.குப்பம், ஜூன் 27: கே.வி.குப்பத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த ஆட்டு சந்தையில் ஒரே நாளில் ₹4 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இதில் நெல்லூர் ரக ஆடுகள் தலா ₹1 லட்சத்துக்கு விற்பனையானது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும், திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆட்டு சந்தை அதிகாலை கூடியது. வருகிற 29ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அதிகாலை 4 மணியிலிருந்தே ஆயிரத்திற்கும் ேமற்பட்ட ஆடுகள் வார சந்தைக்கு கொண்டுவரபட்டது.

இதில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பபத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. மார்ஷலா ஆடுகள், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள், செம்மறி ஆடுகள், கசாயம் ஆடுகள், குட்டி ஆடுகள், மயிலைம்பாடி ரக ஆடுகள், சீனிகிடாய் ரக ஆடுகள், வெள்ளாடுகள், பெங்களூர் ஜமுனாபாரி ரக ஆடுகள் என பல ரகங்கள் கொண்ட ஆடுகள் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவந்ததை சக வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் ஆட்டு சந்தை வழக்கம் போல் இல்லாமல் நேற்று களைகட்டியது.

காலை 8 மணியளவிலிருந்து 10 மணி வரை போக்குவரத்து நெரிசலுடன் அப்பகுதி காணப்பட்டது. கொண்டுவரப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் வளர்ப்பு ஆடுகள் என்பதால் சிலர் விற்கும்போது, அதன் உரிமையாளர்கள் அழுதுகொண்டே விற்றனர். சராசரியாக ஆடுகளின் விலை ₹40 ஆயிரம் வரையும், சில ஆடுகள் விலை ₹80 ஆயிரம் வரையும், சில செம்மறி ஆடுகள் விலை ₹90 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதில் நெல்லூர் ரக ஜீடிப்பி ரக ஆடுகள் தலா ₹1 லட்சம் வீதம் ஒரு ஜோடி ₹2 லட்சம் வரை விலை போனது. அதிகபட்சமாக ஒரு ஆட்டின் விலை ₹1 லட்சம் வரை போனதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றனர். கடந்த வாரம் நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள் ₹85 ஆயிரம் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

நேற்று பெங்களூர் ஜமுனாபாரி ஆடுகள் ₹50 ஆயிரம் வரையிலும், மார்ஷலா ஆடுகள் ₹75 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதேபோல் பல ரக ஆடுகள் ₹40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மதியம் 12 மணி வரை ஆடுகள் விற்பனை ₹4 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை கூடுதலாக விற்பனையாகி வருவதாகவும், பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

19 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi