சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: மும்பை இந்திய ஹஜ் குழு, ஹஜ் 2022 தற்காலிக வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்து, ஏற்கனவே அறிவிப்பு செய்ததில் தகுதியற்றவராக கருதப்பட்ட, 65 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தற்போது ஹஜ் 2022-க்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் ஹஜ் 2018-2022ம் ஆண்டிற்கான ஹஜ் கொள்கைகளின்படி, ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறப்பு வகையின் கீழ் விண்ணப்பிக்கலாம். 31.5.2022 அன்று 70 வயது பூர்த்தியடைந்த அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரருடன் (அதாவது விண்ணப்பிப்பவர் 31.5.1952 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்) ஒரு துணைப் பயணி விண்ணப்பிக்கலாம். துணைப் பயணி அவசியம் இருக்கவேண்டும். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியே விண்ணப்பிக்க இயலாது. ஒரு உறையில் 70 வயதிற்கு மேற்பட்ட இரு பயணிகள் இருந்தால் இரண்டு துணைப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தகுதிக்கான அளவுகோல்கள், வயதுக் கட்டுப்பாடுகள், உடல் மற்றும் உடற்தகுதித் தேவைகள் மற்றும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சவூதி அரேபியா அரசால் கட்டாயமாக்கப்பட்ட மற்றும் பிற தொடர்புடைய நிபந்தனைகளுடன் சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் மீண்டும் வலியுறுத்தப்பட்டு, ஹஜ் 2022-க்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். ஆயினும், ஹஜ் 2022-க்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான முழு செயல்முறையும் சவூதி அரேபிய அரசு மற்றும் இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்கு உட்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …