முத்துப்பேட்டை, நவ.28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தர்காவின் 722-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி கடந்த 23ம்தேதி இரவு துவங்கி அதிகாலை வரை நடைபெற்றது.இந்த நிலையில் கந்தூரி நிறைவு நாளான நேற்று இரவு புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இரவு 7 மணிக்கு தாவூதியா மஜ்லிஸில் உலக அமைதிக்காக புனித மௌலூது ஷரீபு ஓதப்பட்டது. இரவு 8 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் ஜியாரத் முன்னபாக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதன் பிறகு 9 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி துவங்கியது. தர்கா டிரஸ்டி ஐத்துருஸ் கட்டி சாகிப் சிறப்பு துவா ஓதினார் அதிர்வேட்டுகள் முழங்க வாணவேடிக்கையுடன் புனித கொடி இறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு துஆ பிராத்தனை செய்து தப்ரூக் (பிரசாதம்) வழங்கப்பட்டது.