வாஷிங்டன்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வரும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் இந்திய வணிக சந்தை வலிமையை மேம்படுத்துவதோடு தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா வெற்றிகரமான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பை குறிக்கும் அமைதி வழி போராட்டங்களை அங்கீகரிப்பதாக கூறியுள்ளது. பிரச்சனைகளுக்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, ஸ்விடன் நாட்டை சேர்ந்த சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், கமலா ஹாரிஸ் அண்ணன் மகள் மீனா ஹாரிஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வெளியிட்ட பதிவுகள் வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. அடுத்தடுத்து பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான புரிதல் இன்று பிரபலங்கள், புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையிலேயே அமெரிக்கா புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது. …
வேளாண் சட்டங்களால் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும்; இந்திய சந்தையை மேம்படுத்த உதவும்: புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு
previous post