நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே கன்னித்தோப்பு சௌந்தரராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கன்னித்தோப்பில் புகழ் பெற்ற சௌந்தரராஜபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபோகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் தேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஹோமங்கள், மாலை மாற்றும் நிகழ்வு, காப்புகட்டுதல், கன்னிகாதாரனம், வஸ்திரம் சாத்துதல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.