குமாரபாளையம், ஜூலை 15: குமாரபாளையம் கத்தாழை பேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்(50). இவர் குமாரபாளையம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக, ஒப்பந்த நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். போதையில் வேலைக்கு வந்த மாதேசுக்கு, நகராட்சி நிர்வாகம் வேலை கொடுக்கவில்லை. இதனால் கவலையடைந்த மாதேஸ் கடந்த 2 நாட்களாக போதையில் சுற்றி வந்தார். நேற்று மாலை, எடப்பாடி ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டார். பள்ளி நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் செல்லும் நேரத்தில், போதை மயக்கத்தில் மாதேஸ் செய்த மறியலால் வாகன நெரிசல் ஏற்பட்டது. சாலையில் கிடைத்த இடைவெளியில் சிறுவாகனங்கள் செல்வதை கண்ட மாதேஸ், வாகனங்களை துரத்தி துரத்தி சாலையில் படுத்து அட்டகாசம் செய்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குண்டுக்கட்டாக அவரை தூக்கிச்சென்று, போதை தெளியும்வரை வைத்திருந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.