பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சாந்தி(22, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் சாந்தி எம்பிஏ படித்துள்ளார். இந்நிலையில், அவர் பல இடங்களில் வேலை தேடி வந்தார். ஆனால், எங்கேயும் வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் அடிக்கடி விசாரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது பெற்றோர், ‘‘வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சும்மா இருக்கிறாயே, வீட்டிலும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறாயே, இதெல்லாம் சரியா? எங்கேயாவது வேலைக்கு போ’’ என்று கூறி கடுமையாக கண்டித்துள்ளனர்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். …