திருவலம், ஏப்.5: காட்பாடி அடுத்த திருவலம் அருகே புதரில் பதுக்கிய 500 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த இபி கூட்ரோடு பகுதியில் நேற்று மாலை திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மதுபான கடை எதிரே உள்ள புதரில் பனை ஓலை மூலம் மூடி வைக்கப்பட்டிருந்த 10 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகள் குறித்து ராணிப்பேட்டை வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் ஆனந்தன், வன காப்பாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ எடை கொண்ட 10 செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒருசில இடங்களில் செம்மரக்கட்டைகள் கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.