வேலூர்: வேலூர் அருகே சேதமடைந்த பொன்னை ஆற்று ரயில்வே பாலம் சீரமைக்கப்பட்டதால் 3 நாட்களுக்கு பிறகு அந்த வழியே ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. முகுந்தராயபுரம், திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 156 ஆண்டுகள் பழமையான பொன்னை ஆறு ரயில்வே மேம்பாலத்தில் மழை, வெள்ளம், காரணமாக ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக நீடித்த பாலத்தை பலப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்றதால் முதலில் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் முதல் முறையாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பொன்னை ஆற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி முதல் பயணிகள் ரயில்கள் அந்த வழியே 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சீரமைக்கப்பட்ட பாலத்தில் தொடர்ந்து வழக்கமான ரயில்சேவை தொடங்கும் வரை பொறியாளர்கள் பாலத்தின் அதிர்வு தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவார்கள் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். …