வேலூர்: வேலூர் அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். ேவலூர் அண்ணா சாலையில் உள்ள பழைய மீன்மார்க்கெட் பகுதியில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரையிலான பிளாட்பார பகுதிகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தள்ளுவண்டி கடைகள், லோடு ஆட்டோக்கள் ஆகியவற்றின் மூலம் பழங்கள், பழச்சாறுகள் மற்றும் சோடா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ஆங்காங்கே விதிமீறி கார்கள், லாரிகள் மற்றும் டூவீலர்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் ஆய்வு செய்து அகற்றும்படி மேயர் சுஜாதா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி 2வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதிகாரிகள் வருவதை அறிந்து அங்கிருந்த சில வியாபாரிகள் கடைகளை தாங்களாக முன்வந்து அகற்றிக்கொண்டனர். இதேபோல் பழைய மீன்மார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்குள் 6 ரிக்ஷாக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையும் அதிகாரிகள் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது. தடை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் டயர்களில் இருந்த காற்று வெளியேற்றப்பட்டது. இதனிடையே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக்கொண்டிருந்தபோது ஒரு தள்ளுவண்டி கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக அதன் வியாபாரிக்கு ₹200 அபராதம் விதிக்கப்பட்டது.இதேபோல் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து கிரீன்சர்க்கிள் வரையிலான பகுதி வரை ஆங்காங்கே கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. அவற்றை கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி மூலம் அகற்றினர்….