மதுரை: புகையிலை கடத்திய இருவருக்கு ஜாமீன் வழங்கி மருத்துவக்கல்லூரிக்கு ரூ. 2 லட்சம் வழங்க நிபந்தனை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் போலீசாருக்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச்செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேன் மற்றும் காரை மறித்து சோதனையிட்டனர். அதில், ரூ.11.91 லட்சம் மதிப்புள்ள புகையிலையை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சண்முகசுந்தர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. சண்முகசுந்தர் ரூ.50 ஆயிரமும், சிவக்குமார் ரூ. 1.50 லட்சமும் திரும்பப் பெறாத வகையில் நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். 4 வாரத்திற்கு தினசரி காலையும், அதன்பிறகு சனிக்கிழமை தோறும் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’ என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்….