வேதாரண்யம், ஜூலை 18: நாகப்பட்டனம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் உலக நீதி தினம் மற்றும் உலக ஈமோஜி தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் உள்ளிட்ட பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலக நீதி தினம் குறித்து மாணவர்களுக்கிடையே பள்ளி ஆசிரியர் வசந்தா பேசும்போது, சர்வதேச நீதிக்கான உலக தினம், சர்வதேச குற்றச் செயல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் நவீன நீதி முறையைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச குற்றவியல் நீதி தினம் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும், நீதியை ஆதரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் விரும்புவதோடு மட்டுமல்லாமல், உலகின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு சவாலாக இருக்கும் குற்றங்களைத் தடுக்க மக்களை ஒன்றிணைப்பதால் இந்த நாள் முக்கியமானது என்றார்.