வேடசந்தூர், ஏப். 7: வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சி, பெருமாள் கவுண்டன்பட்டியில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விடலை பருவ கர்ப்பம் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. எரியோடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் தங்கராஜ் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன் மகேஸ்வரி, குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விடலை பருவ கர்ப்பணம் தடுப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார்.
மேலும் இதனால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது நாம் காவல் துறைக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிப்பது பற்றியும், இதில் ஈடுபடுவோர் மீது அளிக்கப்படும் தண்டனைகள் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அனைவரும், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விடலை பருவ கர்ப்பம் தடுப்பு குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்கரை, சுகாதார ஆய்வாளர்கள் போரப்பன், சவடமுத்து, மதிச்செல்வன், கிராம ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் பெண்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.