மதுராந்தகம், ஜன.1: வெள்ளபுத்தூர் ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், விளை பொருட்கள் உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு மற்றும் செயலாக்க சிறப்பு திட்ட முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த முகாமில், உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், கவிதா, நந்தகுமார், முச்சேந்தி ஆகியோர் கலந்துகொண்டு வேளாண்மை திட்டங்களில் உள்ள பல்வேறு அரசு மானியங்கள், அவற்றை பெறுவதற்கான பயனாளிகளின் தகுதிகள் மற்றும் வேளாண் விரிவாக்கத்திற்கான பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
அப்போது, விவசாயிகள் தங்களின் சந்தேகங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜவஹர்லால், உதவி பேராசிரியர்கள் ராஜசேகரன், முஹம்மதி இஷானுல்லா, நவீன் குமார், ஸ்ரேயா மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.