வெள்ளக்கோவில், பிப்.10: வெள்ளகோவில் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர்களுக்கு பட்டுப்புடவை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். வெள்ளக்கோவில் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. பருவ மழையின் போது ஒவ்வொரு வார்டிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சென்று, டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
வீட்டின் முன்புறம் உள்ள டயர், தேங்காய் தொட்டி, ஆட்டுக்கல் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் வளராத வண்ணம் `அபேட்’ மருந்துகள் தெளிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர்கள் 30 பேருக்கு வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில் கமிஷனர் வெங்கடேஷ்வரன் சொந்த செலவில் பட்டுப்புடவை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மேலும், டெங்கு ஒழிப்பு பணியின் போது நகராட்சி வரி வசூல், நிலுவை தொகை உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பரிசு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.