நெல்லை : நெல்லை அருகே நடுவக்குறிச்சியில் வெட்ட வெளியில் இயங்கும் கொள்முதல் நிலையத்தால், மழையில் நனைந்து 200 நெல் மூட்டைகள் அழுகி சேதம் அடைந்தன. கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைத்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு சமீபத்தில் வெகுவாக உயர்த்தியது. அதாவது சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டால் ரூ.1960 மற்றும் ஊக்கத் தொகை ரூ.100 என மொத்தம் ரூ.2060 நிர்ணயித்துள்ளது. சாதாரண ரகத்துக்கு ரூ.1940 மற்றும் ஊக்கத் தொகை ரூ.75 சேர்த்து மொத்தம் ரூ.2015 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் ரூ.1200க்கும் கீழே உள்ளது. எனவே அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக ரூ.800 லாபம் கிடைப்பதால் விவசாயிகள் அங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது பிசான சாகுபடி நடந்து வருகிறது. கார் சாகுபடி அனைத்து பகுதிகளிலும் நடந்த நிலையில், பாளை அருகே நடுவக்குறிச்சி மற்றும் சீவலப்பேரி பகுதி விவசாயிகள் தாமதமாக கார் சாகுபடி அறுவடை நடத்தினர். அறுவடை நடத்திய பல விவசாயிகள் அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை நாடிச் சென்றனர். நிலத்துக்கான அடங்கல் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் முறையாக ஒப்படைத்தனர். நெல் மூட்டைகளை பெற்றுக் கொண்ட கொள்முதல் நிலைய அதிகாரிகள், விரைவில் பணம் தருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடுவக்குறிச்சியில் வெட்ட வெளியில் கூரைகள் ஏதுமின்றி நெல் கொள்முதல் நிலையம் இயங்கியதால், அப்பகுதியில் பெய்த மழையில் அனைத்து நெல் மூடைகளும் நனைந்து அழுகின. நெல்மணிகள் கருத்து, துர்நாற்றம் வீசவும் ஆரம்பித்தது. சுமார் 200 நெல் மூடைகள் எதற்கும் பயன்படுத்த இயலாத அளவுக்கு சேதம் அடைந்தது. இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் நடத்தியவர்கள், அவற்றை கண்டும், காணாமலும் விட்டு விட்டனர். தற்போது ஆடு, மாடுகளும், கோழிகளும் நெல் மூடைகளை மேய்ந்து வருகின்றன. இதனால் நெல் மூடைகளை ஒப்படைத்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். நடுவக்குறிச்சியில் பாதுகாப்பான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, நெல் மூடைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர். 3 மாதமாக பயிர்க்கடன் கிடைக்கவில்லைநெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. 5 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட இவ்வங்கி மூலம் ராஜவல்லிபுரம், கட்டளை, உதயநேரி, அருகன்குளம் என 12 கிராம விவசாயிகள் பயிர்கடன் பெற்று பயன் பெற்று வருகின்றனர். நடப்பு சாகுபடிக்கு 3 மாதத்திற்கு முன்பே பயிர்கடன் பெற விவசாயிகள் விண்ணப்பித்தனர். ஆனால் இன்று வரை பயிர்கடன் வழங்கப்படாத காரணத்தால், விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர்….