நெல்லை, ஜூலை 20: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் கீழ் கிளி வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது. திருக்குறுங்குடி பகுதியில் இதுபோன்று வீட்டில் கிளி வளர்ப்பு செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கிளிகளை திருக்குறுங்குடி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கால அவகாசத்தை மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும் பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.