மாதவரம், ஜூலை 4: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகளின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்று வருகின்றனர்.
சென்னையில் வீடுகள் இல்லாத அடித்தட்டு மக்களின் துயரத்தை போக்கவும், குடிசைகள் இல்லாத பகுதியாக சென்னையை மாற்றவும் குடிசை மாற்று வாரியம் என்ற திட்டம் 1970 கால கட்டங்களில் கொண்டுவரப்பட்டது. வடசென்னையில் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியில் முதன்முதலில் இந்த திட்டத்தை தொடங்கி, அதன் பிறகு சென்னையில் பல இடங்களிலும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல இடங்களிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில், குடிசை மாற்று வாரியம் என்ற பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பெயரில் மட்டும் தான் மாற்றமா என கேட்பவர்களுக்கு விடை சொல்லும் வகையில் தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் கட்டிடங்களில் பல்வேறு மக்கள் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அந்த வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதும் தங்களுடைய வேலை முடிந்து விட்டது என்று எண்ணாமல் சென்னை மாநகராட்சியும் பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகிறது.
மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்தில் பூங்கா, விளையாட்டுத் திடல், நூலகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னையில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி அதிகாரிகள் பல பணிகளை மிகவும் நுணுக்கமாக செய்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, இதை முதல்வர் திறந்து வைத்தார். 3 பிளாக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 840 வீடுகள் உள்ளன. அடித்தட்டு மக்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி முன்வந்தது.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து விட்டோம், அதன் பிறகு அவரவர் அவர்களது வேலையை பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல் அந்தப் பகுதி மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு யோசனைகளை முன் வைத்தனர். அதில் குறிப்பாக, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டால் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு ஒரு இடம் தேவை என்பதாலும், குழந்தைகள் அடிப்படை கல்வியை முறையாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 74 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே இந்த மையங்கள் கட்டப்பட்டுள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இந்த மையத்தில் மாண்டிசோரி கல்வி முறையில் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி சொல்லித் தரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உள்ளே 40 லட்ச ரூபாய் செலவில் நூலகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 3,000 புத்தகங்கள் முதற்கட்டமாக வைக்கப்பட்டுள்ளன. கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நபர்கள் மட்டுமல்லாது, அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயன்படும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இந்த நூலகம் பெரிய அளவில் உதவியாக இருக்கும். நூலகத்தின் அருகிலேயே காற்றோட்டமான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 80.69 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உள்ளே பிரமாண்ட பூங்கா அமைத்திருப்பது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, நூலகம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம் என அனைத்தையும் முதல்வர் கடந்த சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னையில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளதுபோன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட கவுதமபுரம் குடியிருப்பிலும் அதே வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நேரில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்
கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சியால் செய்யப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்து திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. படிப்படியாக ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குழந்தைகளின் கல்வியை முக்கியமாக வைத்து 2 அதிநவீன குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பூங்கா பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு சுற்றிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த பணிகளை உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன், உதவி பொறியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டனர். உயர் அதிகாரிகளும் அவ்வப்போது இந்த இடத்தை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். இந்த குடியிருப்பில் உள்ள மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.