கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் 4வது வார்டுக்கு உட்பட்ட விநாயகபுரம், தொட்டிமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அமாவாசை (65). கூலி தொழிலாளியான அவரது குடிசை வீட்டில் அருகிலுள்ள சாலை ஓரத்தில், தென்னை மரங்கள் உள்ளன. இதில், ஒரு தென்னை மரத்தின் ஓலையில் கடந்த 6 மாதங்களாக விஷ குளவிகள் கூடுகட்டி வந்தது.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட விஷ குளவிகள் கட்டி இருந்த கூடு திடீரென பெரிதானதை கண்டு முதியவர் திடுக்கிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறைமலைநகரில் உள்ள தீயணைப்பு துறையினரிடம் புகார் கூறியதையடுத்து, தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் கார்த்திகேயன், தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். பின்னர், தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரமாக போராடி விஷ குளவிகளை அகற்றினர்.