மதுரை, ஜன.28: விவசாயிகளின் நிதி தேவைகளுக்காக ஒன்றிய அரசின் கிஷான் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இது குறித்து வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறும்போது, ‘‘கிஷான் கடன் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை ஆண்டுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற அடமானம் தேவை இல்லை. வங்கி நடைமுறைகள் ஏதுமின்றி விரைவாக கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்த கிஷான் கடன் அட்டை 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
மேலும் கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகளும் உள்ளன. எனவே இதுவரை கிஷான் கடன் அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், கணினி சிட்டா மற்றும் சாகுபடி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அவர்களது கிராமங்களில் நடைபெறும் இதுகுறித்த கூட்டங்களிலோ அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டோ சமர்ப்பிக்கலாம்’’ என்றார்.