தஞ்சாவூர், மார்ச் 12: தஞ்சை மாவட்டம் விஷ்ணும்பேட்டையில் சிறுவர் விளையாட்டு பூங்கா குடிநீர் தொட்டி மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்திற்கு தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சை கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பூதலூர் தாலுகா விஷ்ணும்பேட்டை கிறிஸ்துவ தெரு, திடல் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: விஷ்ணு வேட்டை கிறிஸ்தவ தெரு, திடல் தெரு பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம் இங்கு மாதா கோவில் தெரு, புல எண் 335/2 என்ற இடத்தில் இப்பகுதி சேர்ந்த வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.
மேலும் இந்த இடத்தில் அரசு சார்பில் பொதுக் கழிவறை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த கழிவறை பழுதடைந்து விட்டதால் அந்த இடத்தை சுத்தம் செய்து பொது உபயோகத்திற்காக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மேற்படி இடத்தினை அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அளித்து குடிநீர் தொட்டி மற்றும் சிறுவர் பூங்கா அமைத்து தர கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட இடத்தினை எங்கள் தெருவை சார்ந்த தனியாருக்கு பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பயன்படுத்தி வந்த இடத்தினை எவ்வாறு பட்டா செய்ய இயலும் எனக்கேட்டும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே இந்த பட்டாவினை உடனே ரத்து செய்து மீண்டும் பொதுமக்கள் உபயோகத்திற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.