விருதுநகர், டிச. 31: விருதுநகர் அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சியில் 12வது வார்டுக்கு உட்பட்ட ரோஜா நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. மேலும் சாலை, மின்விளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் அழகம்மாளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் விருதுநகர் டி.டி.கே. ரோட்டில் உள்ள சிவகாமிபுரம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேற்கு எஸ்ஐ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெண்களை கலைந்து போக செய்தனர். இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.