விருதுநகர், டிச. 31: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், ஆணையத்தலைவர் வெங்கடேசன் தூய்மைப்பணியாளர்கள் நலன் குறித்து, அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
இதில் ,ஆணையத்தலைவர் வெங்கடேசன் தூய்மைப்பணியாளர்கள் நலன் குறித்து, சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் அவர் கூறுகையில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் அமைப்பதற்கு 1993 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தூய்மை பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தானாக முன் வந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண்கின்றது.
தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் சுற்றுப்பயணம் மற்றும் ஆய்வு கூட்டத்தின் போது, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொ) அனிதா மோகன்,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் யசோதா மணி, அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.