ஆரணி, ஏப். 14: ஆரணி அடுத்த இரும்பேடு திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர்(30), இவர், இரும்பேடு பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதேபகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காய்கறி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். மேலும், நேற்றுமுன்தினம் தஸ்தகீர் ஓட்டலில் காய்கறி வியாபாரம் செய்த பணத்தை வாங்கிவர சென்றுள்ளார். மேலும், ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்(35), சக்திவேல்(26), ஆகிய இருவரும் ஓட்டலுக்கு மதுபோதையில் வந்து, சிக்கன் ரைஸ் அடர் செய்து வாங்கியுள்ளனர்.
பின்னர், ரைஸ்சுக்கு பணம் கொடுப்பதில், ஓட்டல் மாஸ்டரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தஸ்தகீர் உடனே அந்த நபர்களிடம் வாங்கியதற்கு பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த சக்திவேல், அருண் ஆகிய இருவரும் சேர்ந்து நீ என்ன அவனுக்கு சப்போட்டா என கூறி அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடினர். இதில், படுகாயம் அடைந்த தஸ்தகீரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, தஸ்தகீர் ஆரணி தாலுகா போலீசில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை நேற்று போலீசார் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அருணை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.