பெரம்பூர், மார்ச் 7: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் நாளை மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. இதனால் அங்கு சிறப்பு வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி பகுதியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் ஆறு கால பூஜைகளுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு முதல் காலம் காலசாந்தி பூஜையுடன் மகாசிவராத்திரி தொடங்கப்பட்டு பகல் 11 மணியளவில் உச்சி காலம் பூஜையும், மாலை 3.30 மணியளவில் பிரதோஷ கால அபிஷேகமும், இரவு 9 மணியளவில் ருத்ர பாராயணமும் நடைபெறும். மேலும் நள்ளிரவு ஒரு மணிக்கு சிவராத்திரி காலம், நாளை மறுதினம் அதிகாலை 4.30 மணியளவில் உஷ் கால பூஜை உள்ளிட்ட 6 கால பூஜைகள் நடைபெற உள்ளன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் கோயிலில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.