Monday, April 29, 2024
Home » விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கோவை எம்.பி. கண்டனம்

விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கோவை எம்.பி. கண்டனம்

by MuthuKumar

கோவை, ஜூன் 8: விமான போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒடிசாவில் நடந்த பெரும் ரயில் விபத்துக்கு பிறகு அப்பகுதியில் இருந்து இயக்கப்படும் பயணிகள் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில், பயணிகள் விமான டிக்கெட் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய விமான சேவை நிறுவனங்கள் சில நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்தில் விமான பயண டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அப்போது, மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே சிங் விமான கட்டணங்களின் கீழ் வரம்பு மற்றும் மேல்வரம்பு ஆகிய இரண்டும் 31-8-2022 அன்றிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என பதில் அளித்தார்.

உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பினை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது பயணிகளின் நலனுக்கேற்ற வகையில் கட்டணங்களை வைத்திருக்க முடிந்தது. மேலும், அரசுக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருந்தபோது பேரிடர் காலங்களில் அவற்றை பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இலவசமாக பயன்படுத்த முடிந்தது. ஆனால் தற்போது, பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பினை நீக்கி அவற்றை தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டது. அப்படி செய்துவிட்டு, இப்போது இரட்டை நிலையில் ஒரு அறிக்கையை அமைச்சகத்தின் மூலம் வெளியிடுகிறது.

தனியார் விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்நாட்டு பயணிகள் பயணச்சீட்டு விலை நிர்ணயத்தை அனுமதித்து இருக்கிற காரணத்தினால், பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பேரிடர் நேரங்களில் விமான டிக்கெட் விலைகளை தங்கள் விருப்பப்படி உயர்த்திக் கொள்கின்றனர். இதனால் உள்நாட்டு விமான பயணிகள் கடும் நெருக்கடியை எதிர் கொள்கின்றனர். விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முரண்பாடான செயலை கண்டிப்பதோடு, உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பு மீண்டும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

2 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi