நாமக்கல், செப்.22: நாமக்கல்லில், இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மோகனூர் காவிரியில் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில், பலப்பட்டரை மாரியம்மன் கோயில், தட்டாரதெரு, குட்டைத்தெரு, கருப்பப்பட்டிபாளையம், தினசரி மார்க்கெட், சாவடி தெரு, பாவடி தெரு உள்ளிட்ட 10 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.
இவை நேற்று மதியம், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே கொண்டு வரப்பட்டது. இதைதொடர்ந்து விநாயகர் சிலைகள் லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் ராவணன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை, வழக்கறிஞர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி, மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன், ஏடிஎஸ்பி ராஜி ஆகியோர் தலைமையில் நாமக்கல் நகரில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாமக்கல்லில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், மோகனூர் காவிரியில் கரைக்கப்பட்டன.