தர்மபுரி, ஏப்.19: பரிசோதனைக்காக விதை மாதிரிகளை எடுத்து அனுப்புமாறு தர்மபுரி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறுதானியங்கள் வறட்சியை தாங்கி அனைத்து கால நிலைகளிலும் வளரும். குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்துவிடும். இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி சிறுதானிய பயிர்களில் முளைப்புத்திறன் 75 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதம், புறத்தூய்மை கம்பு பயிர்களுக்கு 98 சதவீதம், மற்ற இதர சிறு தானிய பயிர்களுக்கு 97 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விதை பரிசோதனை செய்வதற்கு 25 கிராம் சிறு தானிய விதையை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம், வனஅலுவலர் அலுவலக அருகில் விதை பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. விதை மாதிரி அனுப்பும்போது, அது விதை குவியலின் பிரதியாக இருக்க வேண்டும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளை அனுப்பும்போது, ஒவ்வொரு மாதிரிக்கும் குறியீட்டு எண்கள் வழங்க வேண்டும். சுத்தமான பையில் அதே மாதிரிகளை எடுத்து பயிர் மற்றும் ரகத்தின் விவரங்கள் அடங்கிய துண்டு சீட்டு உள்ளே வைத்து அனுப்பலாம். ஒரு விதை மாதிரிக்கு ₹80 பரிசோதனை கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.