நாமக்கல், மார்ச் 24: நாமக்கல்லில், விதிமீறி இயக்கப்பட்ட 6 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நாமக்கல் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிக பாரம் ஏற்றிச் சென்றது போன்ற விதி மீறல்களில் ஈடுபட்ட 45 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ₹2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், சொந்த பயன்பாட்டு வாகனத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 3 வாகனங்கள் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்தார்.