நித்திரவிளை, டிச. 19: குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து பத்தாயிரத்து ஐநூறு கன அடி தண்ணீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டது. இதனால் வாவறை ஊராட்சிக்குட்பட்ட மாமுகம் பகுதியில் உள்ள நெய்யார் இடதுகரை சானல் வழியாக நேற்று காலை ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் மாமுகம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் நேற்று காலை பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களை அமைச்சர் மனோ தங்கராஜ். ராஜேஷ்குமார் எம்எல்ஏ பத்மநாபுரம் சப் கலெக்டர் கௌசிக், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் சந்தித்து அரசு தரப்பில் உரிய உதவிகள் செய்யப்படும் என்று கூறினார்கள். தொடர்ந்து முகாமில் தங்கியிருந்த 164 நபர்களுக்கு வாவறை ஊராட்சி தலைவர் மெற்றில்டா தலைமையில், கவுன்சிலர் வெஞ்சிலாஸ், துணைத் தலைவர் ராஜேஷ் போஸ், ஊராட்சி செயலர் கெமி முன்னிலையில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் சுஜிகுமார் மேற்பார்வையில் மதிய உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.