நாகர்கோவில், பிப்.19: இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறை விதிக்கப்பட்ட காசி மீது மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவரது மகன் காசி (27). இவர் இளம் பெண்கள், மாணவிகளுடன் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் இன்ஜினியர் உள்ளிட்ட பலர் காசிக்கு எதிராக புகார் அளித்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். காசியிடம் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்களும், 410 ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 141 பெண்கள் வரை காசியால் பாதிக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. காசி மீது கடந்த 2020ல் 7 வழக்குகளும், 2021 ல் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ல் நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் காசிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது. இதில் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, காசி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனு விசாரணையில் உள்ளது. இதுவரை காசி மீது 4 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஒரு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் சேர்த்து மொத்தம் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இன்னும் காசி மீது 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது. காசி வழக்கில், காசி தவிர அவரது நண்பர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் காசியின் தந்தை தங்கபாண்டியனும், தடயங்களை அழித்ததாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.