வால்பாறை, ஏப்.26: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ள நிலையில் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக வால்பாறைக்கு ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். பள்ளி விடுமுறையை முன்னிட்டு கோவை, நெல்லை, மதுரை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் கோடை விடுமுறையில் வால்பாறைக்கு வருவது உண்டு.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்கி குளிர்ந்த சூழலை அனுபவித்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து வெகுவாக குறைந்து வால்பாறையின் பிரதான தெருவான மெயின் ரோடு மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஹோட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்கள் காலியாக உள்ளது. இந்நிலை, தொடர்ந்தால் வால்பாறையின் பொருளாதார நிலை சீர் குலைந்து விடும் எனவும் வால்பாறை கோடை விழா தேதியை உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெபராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.