பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (31). இவர், பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் கார்த்திக் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்திக்கை, அவரது நண்பர்கள் 5 பேர் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், கார்த்திக்கின் தலை முழுவதுமாக சிதைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் அங்கிருந்து அவர்கள் தப்பினர். இதுகுறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு உள்ளிட்டோர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான காட்டான் மோகன் என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கார்த்திக்குடன் சேர்ந்து மது அருந்தியபோது, போதையில் கார்த்திக் காட்டான் மோகனை அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் கார்த்திக் தான் செல்லும் இடங்களில் எல்லாம், ‘‘காட்டான் மோகனை நான் அடித்து விட்டேன். அவன் ஒரு ஆளே இல்லை,’’ என கூறி வந்துள்ளார்.இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காட்டான் மோகன் தனது மகனான மாதவனிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்டு காட்டான் மோகனின் மகனான மாதவன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கார்த்திக்கிற்கு மது விருந்து அளிப்பது போல அழைத்து சென்றுள்ளார். போதை தலைக்கேறியதும் கார்த்திக்கை மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, வியாசர்பாடி பி.வி காலனி 7வது தெருவை சேர்ந்த பீஸ்கா கார்த்திக் (32), வியாசர்பாடி பி.வி காலனி 5வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் (42), சர்மா நகர் பகுதியை சேர்ந்த காட்டன் மோகன் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மாதவன் மற்றும் சரவணன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்….