சென்னை, மே 25: சாதனை புரிந்த இளைஞர்கள் 2023ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் சார்பில் 2023ம் ஆண்டிற்கு (2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சாதனை புரிந்தவர்கள்) டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விருதுக்கு சாகச துறையில் உள்ள நபர்களின் சாதனைகளை அங்கீகரித்திடும் வகையில் இளம் வயதில் வீர, தீர செயல்புரிந்தவர்கள், குழு உறுப்பினர்களாகவும் சரியான நேரத்தில், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவர்களாகவும், பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீர, தீர செயல்புரிந்தவர்களும், இவ்வீர, தீர செயல் மலையேற்றத்திற்கும், அதாவது மூன்று நிலைகளின் நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவர்கள் ஆகியோர் தகுதியுடையவர்கள்.
இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுவதுடன் வெண்கல சிலை, சான்றிதழ், சில்க் டை கொண்ட பிளேசர் ஆகியன வழங்கப்படும். இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் https://awards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.