கோவை, டிச.23: கோவையில் வாலிபரை தாக்கி பைக், லேப்டாப் பறித்து தப்பிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவைப்புதூர் குற்றால நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சங்கர் தனுஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 19ம் தேதி சரவணம்பட்டியில் உள்ள தனது நண்பர் ஒருவரை சந்திக்க பைக்கில் சென்றார். அங்குள்ள நமசிவாய நகரில் உள்ள காலி இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சங்கர் தனுசை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அவரை தாக்கி அவரிடம் இருந்து விலை உயர்ந்த பைக் மற்றும் லேப்டாப்பை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த சங்கர் தனுஷ் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் பைக், லேப்டாப்பை பறித்து சென்றது கோவையில் தங்கி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சேலம் ஓமலூரை சேர்ந்த தனுஷ் (19), தர்மபுரி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த அர்ஷாத் (19), தூத்துக்குடியை சேர்ந்த கால்வின் (22) மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சிவகங்கையை சேர்ந்த ராம்குமார் (23) ஆகிய 4 மாணவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.