சென்னை: அண்ணாநகரில் உள்ள பிரபல ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன மட்டன், சிக்கன், இறால் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர். அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் அண்ணாநகர் 14வது அவென்யூவில் உள்ள பிரபல ரெஸ்டாரண்டில் நேற்று முன்தினம் சாப்பிட்டுள்ளார். அப்போது, அவருக்கு வைத்த இறைச்சி உணவு கெட்டுப்போனதாக இருந்தது. உடனே, அங்கிருந்த ஊழியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஊழியர், `இங்கே நிறைய பேர் வந்து சாப்பிடுகிறார்கள், நீங்கள் ஒருவர்தான் குறை கூறுகிறீர்கள்’ என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவகுமார் தனது செல்போனில் கெட்டுப்போன இறைச்சியை படம் பிடித்து அவற்றை வாட்ஸ்அப் மூலம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், அதிகாரி சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராமராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்த ரெஸ்டாரண்டுக்கு வந்தனர். பின்னர் ஒவ்வொரு உணவாக அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதில், அங்கிருந்த இறைச்சிகளை சோதனை செய்தபோது சிக்கன், மட்டன் மற்றும் இறால் உள்ளிட்டவை கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து சுமார் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து பின்னர் அழித்தனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை கொடுக்க வேண்டும் என ரெஸ்டாரண்ட் ஊழியர்களை எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், ஓட்டலுக்கு சீல் வைத்து ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. அண்ணாநகரில் பிரபல ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது….