மும்பை: வாடகை காருக்குள் பிரபல நடிகையை வைத்துக் கொண்டு அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று மன உளைச்சல் ஏற்படுத்திய டிரைவர் குறித்து, அவர் பேஸ்புக் பக்கத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை மானவ நாயக், தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பு புகாரை பதிவிட்டுள்ளார். அதில், ‘சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு ஆன்லைன் மூலம் புக் செய்த டாக்ஸியில் பயணித்தேன். பிகேசி சிக்னலில் காரை நிறுத்திய டிரைவர், யாரிடமோ போனில் பேசினார். சிக்னல் இடத்தில் போனில் பேச வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அவரை தடுத்தனர். அதற்கு போலீசாரிடம் அந்த டிரைவர் வாக்குவாதம் செய்தார். பின்னர் போலீசார் காரை விடுவித்தவுடன், அவர் என்னை மிரட்ட ஆரம்பித்தார். நான் அவரிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை ஓட்டிச் செல்லுமாறு கூறினேன். ஆனால் அவர் ஜியோ தோட்டத்திற்கு அருகே உள்ள இருட்டான பகுதியில் காரை நிறுத்தினார். நான் காவல் நிலையத்திற்குச் செல்லச் சொன்னேன். என்னிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காரை எடுத்துக் கொண்டு மற்றொரு இடத்தில் நிறுத்தினார். இத்தனை பிரச்னைக்கும் மத்தியில், நான் சம்பந்தப்பட்ட ஆன்லைன் டாக்ஸி புக்கிங் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ேடன். இதையறிந்த டிரைவர், காரை மீண்டும் வேகமாக ஓட்டினார். காரை எங்கேயும் நிறுத்தவில்லை. பிறகு காரின் ஜன்னலை திறந்து கத்த ஆரம்பித்தேன். காரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஒரு ரிக்ஷாக்காரர் ஆகியோர் காரை முந்திக் கொண்டு சென்று காரை வழிமறித்தனர். அதன்பின் காரை டிரைவர் நிறுத்தினார். நான் காரில் இருந்து இறங்கினேன். அன்றிரவு முழுவதும் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால் பயத்துடனே தூங்கினேன். இதுபோன்ற டிரைவர்கள் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பீதியுடன் தெரிவித்துள்ளார்….