சிவகிரி,அக்.19: வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200வது அவதார தினவிழாவை முன்னிட்டு வாசுதேவநல்லூர் வள்ளலார் கருணை உள்ளம் சேவை அறக்கட்டளை சார்பில் வள்ளலார் ஞானசபையில் பேச்சுபோட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு நவ ராசாராம் தலைமை வகித்தார். தொழிலதிபர் மதன் சுப்பிரமணியன், முருகன் முன்னிலை வகித்தனர். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுபோட்டி நடந்தது. வாசுதேவநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேசினர். ‘ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்’ என்ற தலைப்பில் பேசிய தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி யாழினி நாச்சியார் முதல்பரிசு பெற்றார். இரண்டாம் பரிசு ஹரிஹரனும், மூன்றாம் பரிசு மாலினியும் பெற்றனர். முகிலன், ஸ்ரீமதி, ஹன்சிகா தேவி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். ‘என்வழி சன்மார்க்க தனிவழி’ என்ற தலைப்பில் பேசிய 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களில் முதல் பரிசு கார்த்திகா, இரண்டாம் பரிசு அர்ச்சனா, மூன்றாம் பரிசு செல்வப்பிரியா ஆகியோர் பெற்றனர். சாதியா பாத்திமா, அனுஷ்வர்த்தினி, சர்வேஸ்வரன் ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் செல்லப்பா, ஓய்வு பெற்ற கருவூல அலுவலர் கவிஞர் தரன் ஆகியோர் வள்ளலாரின் நெறிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினர். ஏற்பாடுகளை வள்ளலார் கருணை உள்ளம் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் கலைசித்ரா, செயலாளர் ஆறுமுகச்சாமி, ஞானசபை அர்ச்சகர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.