பல்லடம், ஏப்.13: பல்லடத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை கோவை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதன்படி 1, 49 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்துதல், 53 விவிபேட் இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஜீவா ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவை மாவட்ட கலெக்டரும், கோவை நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிராந்திகுமார், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.