Thursday, May 23, 2024
Home » வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி காட்டாங்குளத்தூர் பிடிஓ அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி காட்டாங்குளத்தூர் பிடிஓ அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

by Karthik Yash

செங்கல்பட்டு, ஏப்.11: வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணியை காட்டாங்குளத்தூர் பிடிஓ அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு, புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணிநேரம் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பெயர், சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், அரசுத்துறை தேர்தல் பிரிவு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்போரூர்:காஞ்சிபுரம் தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் கண்காணிப்பு அலுவலர் காளிதாசன், மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் வேலாயுதம், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி ஆகியோர் முன்னிலையில், முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்டது. அப்போது, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் முகவர்கள் உடனிருந்தனர்.

இதையடுத்து, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 318 வாக்குச்சாவடி மையங்களுக்கான இயந்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டன. மொத்தம் 25 டேபிள்கள் போடப்பட்டு 13 ரவுண்டுகளில் சின்னம் பொருத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 383 வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு இயந்திரத்திலும் 11 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருப்போரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டு வரிசையில் நின்று தங்களது, மாதிரி வாக்கினை பதிவு செய்தனர். பின்னர், இந்த மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்பட்டது.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும் 19ம்தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 303 வாக்குசாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள், நோட்டா உட்பட 12 வாக்குகளுக்கான சின்னம் மற்றும் வேட்பாளர் புகைப்படம் பதிக்கும் பணிகளுக்காக 25 குழுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மின்னணு வாக்கு இயந்திரங்களில், வேட்பாளர்களின் சின்னங்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, உத்திரமேரூர் வட்டாட்சியர் கருணாகரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi