திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியில் வாக்குச்சாவடி மையத்தில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக துவங்கியது. இதற்காக காலை முதலே பொதுமக்கள், வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் நீண் ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளுக்கு வருகின்ற வாக்காளர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடனும் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் 18 வார்டுகளுக்கு உட்பட்ட 30 வாக்குச்சாவடி மையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….