திருவில்லிபுத்தூர், நவ. 5: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, திருவில்லிபுத்தூரில் மனித சங்கிலி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல் என்பது உட்பட வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி, நேற்று முன் தினம் திருவில்லிபுத்தூர் கீழ ரதவீதியில் மனித சங்கிலி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் தாசில்தார் செந்தில், கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், வனத்துறை ரேஞ்சர் கார்த்திக், வருவாய் ஆய்வாளர் மலர்பாண்டி, சப்இன்ஸ்பெக்டர் நாகராஜ், சுந்தரேஸ்வரி பி.எட் கல்லூரி நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன், முதல்வர் மல்லப்பராஜ், போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலியில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இறுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில், சுந்தரேஸ்வரி பிஎட் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தாசில்தார் செந்தில் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.